பாமகவும், மாம்பழம் சின்னமும் அன்பு மணி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராமதாஸ் தரப்பால் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்சினையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் பெரும்பாலானோர் அன்புமணி ஆதரவாக இருப்பதால், கட்சியில் அன்புமணி கை ஓங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி முன்கூட்டியே அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி கட்டுப்பாட்டி இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், ராமதாஸ் அணியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது. பாமகவின் பெயர், வண்ணம், கொடி ஆகியவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில், ஏற்கெனவே இருக்கும் பாமக கொடியில் ராமதாஸின் முகத்தை மட்டும் பதித்து புதிதாக கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, வேட்பாளர்களை நிறுத்துவதற்காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புமணிக்கு ‘மேலிட’ ஆதவு இருப்பதால் மாம்பழம் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துகொண்டு, புதிய கட்சியை டாக்டர் ராமதாஸ் உருவாக்கி, அதன்மூலம் அன்புமணிக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்க இருக்கிறாராம். இதனால், எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியிலும், தி.மு.க. தரப்பு உற்சாகத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
