தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று முதல் தொடங்கியது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெறுவதற்காகக் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். குறிப்பாக, விஜய் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, தொண்டர்கள் பலர் அவர் பெயரிலேயே விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், “விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்திலேயே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களைப் பெற்றனர். வரும் 14-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, கட்சியினர் பொறுமையாக வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்” என்றார்.

தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ‘கட்சியின் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளீர்களா?, கட்சி விதிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, சாதி சங்கங்கள் அல்லது பிற சமூக அமைப்பு களுடன் தொடர்பு உள்ளதா?’ என்பது போன்ற கேள்விகள் விருப்ப மனுவில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், களப்பணி ஆற்றியவர்களுக்கும், எவ்வித சாதியப் பின்னணிப் பாதிப்பும் இல்லாதவர் களுக்கும் முன்னுரிமை அளிக்க கட்சித் தலைமை விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்ப மனு பெற மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வாகனங்களில் திரண்டதால், ஈசிஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனையூர் பகுதியில் சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதால், அத்தியாவசியப் பணிகளுக்குச் சென்ற பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதற்கிடையே, தவெக விருப்பமனு ஒரே நாளில் பத்தாயிரம் மனுக்களைப் பெற்றதுதான் திராவிடக் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal