ஓபிஎஸ் டிசம்பர் 24ம் தேதி தனது முடிவு அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்குள் ‘மேலிடத்தில்’ இருந்து நல்ல தகவல்கள் வருமா எனவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது கூட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உள்கட்சி ஆலோசனைகள் தொடர்வதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டம், அவரது அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ஒத்திவைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பு, “அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும்; பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
தகவல்களின்படி, ஓபிஎஸ் தனது அடுத்த கட்ட முடிவை டிசம்பர் 24-ஆம் தேதி, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தில் அறிவிக்க உள்ளாராம். இது புதிய கட்சி தொடங்குதல், கூட்டணி மாற்றம் அல்லது வேறு முக்கிய அறிவிப்பாக இருக்கலாம் என்று யூகங்கள் எழுந்துள்ளன. எம்.ஜி.ஆர் நினைவு தினம் ஓபிஎஸ்ஸுக்கு உணர்வுபூர்வமானது என்பதால், அன்று அறிவிப்பு வரலாம் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இந்த ஒத்திவைப்பு அதிமுகவின் உள்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், ஓபிஎஸ் தரப்பும் தொடர்ந்து மோதலில் உள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், ஓபிஎஸ்ஸின் அடுத்த அடி அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஓ.பி.எஸ்.ஸின் திடீர் ஒத்திவைப்பு பின்னணி குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், ஓபிஎஸ் அ.தி.மு.க.வில் தொடர வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார். காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக பாலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 2வது இடத்தைப் பிடித்தார்.
தேர்தலைப் பொறுத்தளவில் 2ம் இடத்தைப் பிடிப்பது முக்கியம் இல்லை. வெற்றிதான் முக்கியம். என மேலிடம் முடிவுசெய்துவிட்டது. இந்த நிலையில்தான் அண்ணாமலை இரண்டுமுறை டெல்லி சென்றுவந்திருக்கிறார். அடுத்ததாக இன்றைக்கு நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். நினைவுநாளுக்குள் நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.’’ என்றனர்.
