சினிமா தயாரிப்பாளரை தாக்கியதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்ய வந்துள்ள போலீசார், அவரது வீட்டுக்கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தடையுத்தரவு மற்றும் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவர், மீண்டும் தனது சவுக்கு மீடியா சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் மீதும், அவரது குழுவில் பணியாற்றுவோர் மீதும் ஆதம்பாக்கம் போலீசார், சினிமா தயாரிப்பாளரை தாக்கியதாக வழக்கு பதிந்திருந்தனர்.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை.வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார்.
வேறு வழியில்லாத நிலையில், வழக்கறிஞர்கள் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். வந்த வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில், வீட்டின் கதவை உடைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
