இந்தியாவில் இன்னும் சாதி, மதங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆங்காங்கு ஆணவக் கொலைகளும், மதவெறியர்களின் தாக்குதலும் நடந்துகொண்டிருப்பதுதான் வேதனை அளிக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மணமகன் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற பெண் வீட்டார் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியில் வசித்து வருபவர்கள் டேனியல் -& கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 22 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ராகுல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கடும் எதிர்ப்பையும் மீறியும் ராகுலும், கீர்த்தனாவும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தங்களது திருமணத்தை பற்றி பேசியுள்ளனர். அப்போது மீண்டும் கீர்த்தனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, கீர்த்தனாவை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் ராகுல். தனது பெற்றோரிடம் பேசி, குடும்பத்தினர் ஆதரவுடன் வேளாங்கண்ணிக்கு வந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று மதம் மாறி, நாகை வேளாங்கண்ணியில் ராகுல் – கீர்த்தனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த இளம்பெண் கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராகுல் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நைசாக பேசி அவர்கள் இருக்கும் விவரத்தை கேட்டுள்ளனர். இவர்களும் தங்கியிருக்கும் முகவரியை தந்துள்ளனர்.
பின்னர், பெங்களூரில் வசிக்கும் கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு கார்களில் விரைந்து வந்துள்ளனர். ராகுல் மற்றும் கீர்த்தனா தங்கியிருந்த விடுதியில் உள்ளே நுழைந்து ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி, இளம்பெண் கீர்த்தனாவை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது தடுக்க முயன்ற போது ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த வேளாங்கண்ணி போலீசார், வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிப் பின்தொடர்ந்தனர். சேஸ் செய்து, கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் வெங்கோராவ் (30) மற்றும் ராம்நாத் ராவ் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். மணப்பெண்ணுடன் தப்பி சென்ற அவரது குடும்பத்தினரை போலீசார் தேடினர். பெங்களுர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
