‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான் பேசியதை பொதுவெளியில் பகிரமுடியாது’ என மீண்டும் போட்டுடைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன்.

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருங்கிணைந்த அதிமுக என்பது விரைவில் எதிர்பார்க்கலாம், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது அது நல்ல முடிவாக இருக்கும்.

பாஜக எப்போதுமே எனக்கு அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை, நான் அமித்ஷாவை நேரில் பார்த்தேன் அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பாஜக தரப்பில் அழைக்கப்பட்டே சென்றேன் என சொன்னேன், ஒரு முறை அழைத்தார்கள், இரண்டாவது முறை நானே சந்தித்தேன் மூன்று முறை இதுவரை சந்தித்துள்ளேன்.

மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். டிடிவி தினகரனுடன் இணைந்து விஜயுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆசை, அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal