‘பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம்’ என ‘மேலிடம்’ கூறியநிலையில், ‘தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு’ என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷனை கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது, அதே தேர்தல் கமிஷனை சாடுவதும்தான், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கை.
பா.ஜ.க, எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம், தமிழகத்தை நோக்கியே. ‘ஆடத்தெரியாதவன் தெரு கோணல்’ என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவை பெற முடியாதவர்கள் தான், தேர்தல் கமிஷனின் நேர்மையை குறை சொல்வர்.
தேர்தல் கமிஷன் நடத்திய, தேர்தல் வாயிலாக கிடைத்த, எம்.பி., – எல்.எல்.ஏ., பதவிகளில் அமர்ந்து, அதே தேர்தல் கமிஷன் மீது, சந்தேக கற்களை வீசும் ஆட்கள், செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்’’ என கூறியிருக்கிறார்.
