அ.தி.மு.க.வில் இறந்தவருக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி அறிவித்திருப்பதுதான் ஈரோடு அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்தார். அதைத்தொடர்ந்து மறுநாளே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.

மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் உள்ளிட்ட 13 பேரின் கட்சி பதவிகளையும், அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 40 பேரின் கட்சி பதவிகளையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பறித்து நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளராக கோபி நகராட்சி முன்னாள் தலைவர் ரேவதி தேவியும், பொருளாளராக நடுப்பாளையம் சந்திரசேகரும், மாவட்ட மகளிர் அணி செயலாளராக மொடச்சூர் மணி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக தனகோட்டிராம், டி.என்.பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளராக சிவக்குமார், கோபி நகர துணைச்செயலாளராக சிவக்குமார் உட்பட 42 புதிய நிர்வாகிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில், பல மாதங்களுக்கு உயிரிழந்த ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் ஒன்றிய பொருளாளராக எஸ்.கே செல்வராஜ் என்பவரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் அவர் 5 மாதங்களுக்கு முன்பாகவே உயிரிழந்து விட்டதாகவும், இதனை கூட விசாரிக்காமல் நிர்வாகிகள் நியமனத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal