கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து திருச்சியில் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில் நாளை 9ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி கிட்னி விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீதான புகார்களின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ கதிரவன் குடும்பத்திற்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அதிமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சியில் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் நெசவாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிக அளவு விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நெசவு வேலை இல்லாததால், புரோக்கர்கள் ஏழை விசைத்தறித் தொழிலாளர்களுடைய வறுமையைப் பயன்படுத்தியும், இலவச மருத்துவம் என்ற பெயரிலும், விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்ததாக விசாரணையில்தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பயணத்தில், மணச்சநல்லூருக்குச் சென்றபோது கிட்னி திருட்டுபற்றி பேசியதாகத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், ஏழை விசைத்தறித் தொழிலாளர்களிடமிருந்து கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், திமுக நிர்வாகிக்கு சொந்தமான இந்த மருத்துவமனையின் மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும், சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும், திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எனவே, கிட்னி திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து, திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் செப்டம்பர் 9ஆம் (நாளை) தேதி காலை 10 மணியளவில், சமயபுரம் நால்ரோடு எம்ஜிஆர் சிலை அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் என்றும் இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கிட்னி முறைகேடு விவகாரம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal