மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யா தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து மல்லை சத்யாவிடம் விளக்கம் பெறப்பட்ட நிலையில், “கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் செயல்பட்டார்” என்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக, ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என 17&-08-&2025 அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி – நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன். அந்த அறிவிப்பை, 19-&08-&2025 அன்று பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24-&08-&2025 தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27-&08-&2025 அன்று பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06&-09-&2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மல்லை சத்தியா தி.மு.க.வில் இணையப் போவதாகவும் தகவல்கள் வருகிறது. அப்படி மல்லை சத்தியா தி.மு.க.வில் இணைந்தால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal