கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முடங்கிப் போன விஜய், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி வருகிறது. திமுகவை தனது அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ள விஜய், கடந்த செப்டம்பர் மாதம் தீவிர அரசியலில் இறங்கினார். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்தினார்.
செல்லும் இடங்கள் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தவெக கட்சி செயல்பாடு அப்படியே முடங்கியது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்தே தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுவெளிக்கு வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து மீண்டும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்புக் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜய்யின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜய்யின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், தவெக தொண்டர் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறது. பிரசார பாதுகாப்பிற்காக, ஒரு தொகுதிக்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என தலா இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட தொண்டர் அணியினருக்கு நாளை காலை 9 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொண்டர் அணியினருக்கு, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்க இருக்கின்றனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 5-ஆம் தேதி தவெக பொதுக்குழுக் கூட்டம் முடிவடைந்ததும் சுற்றுப்பயணத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்களுக்கு தமிழக அரசும் திட்டமிடல்களை வகுத்துக்கொடுத்தப்பிறகு இந்த மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாம். இதனால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
